செய்திகள்
கொரோனா பரிசோதனை - திருப்பூர் ரெயில் நிலையத்தில் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்
வடமாநில ரெயில்களில் தினமும் 400 முதல் 600 பேர் வந்திறங்குகின்றனர்.
திருப்பூர்:
கொரோனா தொற்று தணிந்துள்ள நிலையில் திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தினர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
குறிப்பாக வடமாநில ரெயில்களில் வருவோர் கட்டாய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதுவரை ஒரு ‘டோஸ்’ கூட செலுத்தவில்லையெனில் அங்கேயே தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
வடமாநில ரெயில்களில் தினமும் 400 முதல் 600 பேர் வந்திறங்குகின்றனர். கோரக்பூர் - கொச்சுவேலி (ரப்திசாகர்), பாட்னா - எர்ணாகுளம் (பாட்னா எக்ஸ்பிரஸ்), தன்பாத் - ஆலப்புழா (டாடாநகர் எக்ஸ்பிரஸ்), சில்சார் - திருவனந்தபுரம் ஆகிய வாராந்திர ரெயில்கள் திருப்பூர் வந்தன. ரெயில்களில் இருந்து 1,500க்கும் மேற்பட்டோர் இறங்கினர்.
இரண்டு டாக்டர், 6 செவிலியர், 10 உதவியாளர் உள்ளிட்ட 20 பேர் அடங்கிய மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டனர். ஒரே நேரத்தில் பலர் வருவதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
எனவே கூடுதல் மருத்துவ குழு மூலம் பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியை மாநகராட்சி துரிதப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.