செய்திகள்
திருப்பூர் மார்க்கெட்டுகளில் கொரோனா பரிசோதனை
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஏராளமானோர் தென்னம்பாளையம் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டிற்கு திரண்டு வந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமைதோறும் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர். அதனை தடுக்கும் வகையில் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஏராளமானோர் தென்னம்பாளையம் காய்கறி மற்றும் மீன் மார்க்கெட்டிற்கு திரண்டு வந்தனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வார ஞாயிற்றுக்கிழமைகளில் தென்னம்பாளையம் மார்க்கெட் பாதியிலேயே மூடப்பட்டது.
இதையறிந்து திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகாலை முதலே மார்க்கெட்டிற்கு திரண்டு வந்தபடி இருந்தனர். இதையடுத்து அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சமூக இடைவெளியை கடைப் பிடித்து செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர்.
மேலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டு பொதுமக்கள் சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மார்க்கெட் வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதேப்போல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இது போன்ற நடவடிக்கையை போலீசார் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.