வழிபாடு
கொடியேற்ற நிகழ்ச்சியில் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2022-02-08 04:31 GMT   |   Update On 2022-02-08 04:31 GMT
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் ஆண்டு தோறும் மாசித் திருவிழா 11 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோவில்களில், பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு தோறும் மாசித் திருவிழா 11 நாட்கள் ஒவ்வொரு சமுதாயத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், 5.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றது. கொடியேற்றத்தையொட்டி பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தவுடன் மதியம் 12 மணிக்கு பாலாபிஷேகம், உச்சிகால பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. பின்னர் இசை கச்சேரி நடைபெற்றது. முதல் நாள் திருவிழா பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பொதுமக்கள் சார்பில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News