செய்திகள்
இந்தியாவின் உண்மையான நண்பர்- ஓமன் சுல்தான் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்
ஓமன் நாட்டு தலைவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
அரேபிய வரலாற்றில் நீண்ட காலமாக ஆட்சியாளராக இருந்தவர் சுல்தான் காபூஸ் பின் சையத் அல் சையத். ஓமன் நாட்டின் சுல்தானான கபூஸ் பின் சையத் நேற்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 79. கபூஸின் மறைவிற்கு பல்வேறு உலக தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஓமன் சுல்தான் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘சுல்தான் கபூஸ் பின் சையத் அல் சையத் காலமானதைப் பற்றி அறிந்ததும் நான் மிகவும் வேதனை அடைகிறேன். அவர் ஒரு தொலைநோக்குப்பார்வை கொண்ட தலைவராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவர் ஓமனை நவீனமான மற்றும் வளமான தேசமாக மாற்றினார்.
இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையிலான நட்புணர்வை வளர்ப்பதற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்கினார். சுல்தான் காபூஸ் இந்தியாவின் உண்மையான நண்பராகவும் இருந்தார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்’, என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.