செய்திகள்
மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு கடையில் கண்ணாடி உடைக்கப்பட்டிருப்பதை காணலாம்.

வணிக வளாகத்தில் 4 கடைகளில் கொள்ளை- மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது

Published On 2020-11-20 04:17 GMT   |   Update On 2020-11-20 04:17 GMT
மார்த்தாண்டம் வெட்டுமணியில் வணிக வளாகத்தில் 4 இடங்களில் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
குழித்துறை:

மார்த்தாண்டம் வெட்டுமணியில் குழித்துறை நகராட்சிக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் உள்ளது. குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு எதிரே அமைந்திருக்கும் இந்த வணிக வளாகத்தில் பிசியோதெரபி சென்டர், ஓட்டல், இறைச்சி கடை, பழக்கடை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று வணிக வளாகத்தில் உள்ள பிசியோதெரபி சென்டர் கதவு மற்றும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு இருந்தன. மேலும் அங்கு வைக்கப்பட்டு இருந்த பணத்தை காணவில்லை. இரவில் யாரோ மர்ம நபர்கள் பிசியோதெரபி சென்டருக்குள் புகுந்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. மேலும் அங்கு கண்ணக்கோடு பகுதியை சேர்ந்த சலீம் என்பவர் நடத்தி வரும் ஓட்டல் மற்றும் இறைச்சி கடையிலும் திருட்டு நடந்துள்ளது. அங்கும் சில்லரை ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதோடு ராஜீவ் என்பவர் நடத்தி வரும் பழம் மற்றும் காய்கறி கடையிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் போலீசில் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டன. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் திருட்டு நடைபெற்ற 4 இடங்களிலும் பெரிய அளவில் பணமோ அல்லது விலையுயர்ந்த பொருட்களோ இல்லை. இதன் காரணமாக சில்லரை ரூபாயை மட்டுமே திருடியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள். வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News