செய்திகள்
ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு

ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆய்வு

Published On 2021-01-22 09:31 GMT   |   Update On 2021-01-22 09:31 GMT
ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தனர்.
சென்னை:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா மற்றும் மழை காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. இருந்தாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து உள்ளது.

இந்த நிலையில், வரும் 27 ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை 11 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வருகிற 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நினைவிட கட்டுமான பணிகளை  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News