செய்திகள்
ஜனாதிபதி, பிரதமருக்கான அதிநவீன விமானம் இந்தியா வந்தடைந்தது
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஏர் இந்தியா ஒன் அதிநவீன விமானம் இந்தியா வந்தடைந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் தற்போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகிய மிக முக்கியமான பிரமுகர்கள் (வி.வி.ஐ.பி.க்கள்) ஏர் இந்தியாவின் போயிங் 747 ரக விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்கள் ஏர் இந்தியா ஒன் என்று அழைக்கப்படுகிறது.
இதற்கிடையே நாட்டின் வி.வி.ஐ.பி.க்கள் பயன்பாட்டுக்கு 2 ஜம்போ விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி 190 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.1,422 கோடியே 99 லட்சத்து 36 ஆயிரம்) மதிப்பில் 2 போயிங் 777 விமானங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்காவின் போயிங் நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது.
இந்தியாவுக்கான முதல் போயிங் 777 விமானம் சமீபத்தில் தயாரானது. இந்த விமானத்தை பெறுவதற்காக ஏர் இந்திய அதிகாரிகள் அமெரிக்கா சென்றனர். அவர்களுடன் மத்திய அரசின் மூத்த அதிகாரிகள் சிலரும் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான ஏர் இந்தியா ஒன் என்ற போயிங் 777 விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.
இந்த போயிங் 777 விமானம் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல அதிநவீன வசதிகளை கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.