செய்திகள்
மழை (கோப்புப்படம்)

வடகிழக்கு பருவமழை 20-ந்தேதி தொடங்கும்- வானிலை மையம் தகவல்

Published On 2019-10-09 05:27 GMT   |   Update On 2019-10-09 05:27 GMT
வடகிழக்கு பருவமழை அநேகமாக வருகிற 20-ந்தேதி தொடங்கும் என வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
சென்னை:

தென்மேற்கு பருவமழை ஜூன் 8-ந்தேதி தொடங்கியது முதல் இன்று வரை பரவலாக நல்ல மழை பெய்துள்ளது.

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்கள் மட்டுமின்றி மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா மற்றும் கிழக்கு மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்துள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களிலும் அதிக அளவு மழை கிடைத்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை கர்நாடகாவில் தீவிரமடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணை நிரம்பி காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை 120அடியை எட்டியது.

தென்மேற்கு பருவ மழை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 689 மி.மீ. மழை பெய்துள்ளது. திருத்தணி-931 மி.மீ., தர்மபுரி-763, வேலூர்-748, சேலம்-732, புதுச்சேரி-588, சென்னை நகரம்-493, திருப்பத்தூர்-541, கட லூர்-512 மி.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கமான மழையை விட அதிகமாகும்.

தற்போது தென்மேற்கு பருவமழை காலம் முடிவடையும் நிலையில் உள்ளது.



இதுபற்றி சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது:-

தென்மேற்கு பருவ மழை வடஇந்தியாவில் விலகுவதற்கான அறிகுறி தொடங்கி விட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை விலகி விட்டது.

தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை அடுத்தவாரம் விலகி விடும். அதன்பிறகு காற்றின் திசை மாறும். அதன்பிறகு வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பதை கணித்து விடுவோம்.

அநேகமாக வருகிற 20-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை நவம்பர் 2-ந்தேதி தொடங்கியது. இந்த ஆண்டு முன்கூட்டியே அக்டோபர் 20-ந்தேதி தொடங்கும் அறிகுறி காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News