செய்திகள்
பா.ஜ.க. மீனவரணி சார்பில் பொங்கல் விழா- நடிகை குஷ்பு பொங்கலிட்டார்
பா.ஜ.க. மீனவரணி சார்பில் பொங்கல் விழா சென்னை மெரினா நடுக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தார்.
சென்னை:
பா.ஜ.க. மீனவரணி சார்பில் பொங்கல் விழா சென்னை மெரினா நடுக்குப்பத்தில் மீனவரணி மாநில தலைவர் எஸ்.சதீஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது. விழாவுக்கு சேப்பாக்கம் தொகுதி பொறுப்பாளர் நடிகை குஷ்பு தலைமை தாங்கினார். விழாவில் அந்த பகுதி பெண்களோடு சேர்ந்து குஷ்பு பொங்கல் பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தார். அதனைத் தொடர்ந்து அவர், பெண்களுக்கு சேலைகளை வழங்கினார்.
மாநில செயலாளர்கள் கமலக்கண்ணன், மோகன், சவுந்தர், தொகுதி தலைவர் கஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா முடிந்து வெளியே வந்த நடிகை குஷ்புவிடம், பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவர் துரித உணவகத்தில் பணம் கொடுக்காமல் மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவது குறித்து கேட்டதற்கு, “அவர் செய்த தவறுக்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். மதுபோதையில் சுயநினைவு இல்லாமல் இப்படி பேசும் காட்சிகளை பார்க்கும்போது, பா.ஜ.க. சார்பில் அதற்கு ஆதரவு தெரிவிக்கப்போவது இல்லை. அந்த வீடியோவை நான் பார்த்தேன். பா.ஜ.க.வை பொறுத்தவரையில் எந்த இடங்களிலும் மதக்கலவரம் செய்தது இல்லை. சிறுபான்மை மக்களை நாட்டைவிட்டு வெளியே அனுப்பியது கிடையாது. பா.ஜ.க.வை பற்றி பொய் பிரசாரம் செய்கிறார்கள்” என்று பதில் அளித்தார்.