செய்திகள்
பாறைக்குழியில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு - அம்மாபாளையத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்
சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அவிநாசி தாசில்தார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி 1 மற்றும் 2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பைகள் அம்மாபாளையம் காலக்காடு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது.
இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்ததுடன், குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சாலைமறியல், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை அம்மாபாளையத்தில் குப்பைகள் கொட்டப்படும் பாறைக்குழியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அவிநாசி தாசில்தார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
அதிகாரிகள் தரப்பில், தடையாணை பெற்று வாருங்கள். போராட்டத்தை தொடர்ந்தால் கைது செய்வோம் என்றனர். இதையடுத்து அங்கு போலீஸ் வாகனமும் வந்து நிறுத்தப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள், கோர்ட்டில் வழக்கு தொடர போவதாக கூறிவிட்டு சென்றனர்.