செய்திகள்
கோப்பு படம்.

ரே‌ஷன் கடைகளில் பயோ மெட்ரிக் முறையால் கொரோனா பரவும் அபாயம்

Published On 2021-05-11 10:16 GMT   |   Update On 2021-05-11 13:15 GMT
ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்க அனைவரும் ஒரே எந்திரத்தில் கைரேகையை பதிவு செய்ய வேண்டியதுள்ளதால் இதன் மூலம் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது.

திருப்பூர்:

கடந்த 2020 அக்டோபர் முதல் ரே‌ஷன் கடைகளில் குடும்ப உறுப்பினர்கள் விரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்னும் பயோ மெட்ரிக் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதற்கென அனைத்து ரே‌ஷன் கடைகளுக்கும் புதிய விற்பனை முனைய எந்திரம் வழங்கப்பட்டது. அதன்படி தற்போது வரை ரே‌ஷன் கடைகளில் விரல் ரேகையைப் பதிவு செய்து பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலும் கொரோனா பரவலின் 2 வது அலை ஆக்ரோ‌ஷமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதிலிருந்து தப்பிக்க முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் ஊரடங்கு காலத்திலும் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்கும் வகையில் ரே‌ஷன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனாலும் தற்போது வரை விரல் ரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும் என்ற நடைமுறை தொடர்கிறது. இது பொதுமக்களிடையே கொரோனா பரவல் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமூக விலகல் முக்கியமானதாக இருக்கிறது.ஆனால் ரே‌ஷன் கடைகளில் தொடர்ச்சியாக அனைவரும் ஒரே எந்திரத்தில் கைரேகையை பதிவு செய்ய வேண்டியதுள்ளது. இதன் மூலம் கொரோனா பரவல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கொரோனா பரவல் கட்டுப்படும் வரை கைரேகை பதிவு முறையை ரத்து செய்து விட்டு பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறினர்.

Tags:    

Similar News