சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு ஆயுள் தண்டனை- கோவை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
கவுண்டம்பாளையம்:
கோவை மேட்டுப்பாளையம் மாதையான் லே- அவுட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 24). அதே பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். திருமணமாகி மனைவி உள்ளார்.
இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் 2-வது திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து பெற்றோருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள் துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மெக்கானிக் விஜயகுமாரை கைது செய்தனர்.
இது குறித்தான வழக்கு கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதிகா நேற்று தீர்ப்பளித்தார். அதில் திருமண ஆசைவார்த்தை கூறி சிறுமியை பலாத்காரம் செய்த விஜயகுமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.