செய்திகள்
விவசாயிகள் போராட்டக் களத்தில் நடந்த கொலை... நிஹாங் அமைப்பைச் சேர்ந்த 2 பேர் கைது
லக்பீர் சிங்கை கொலை செய்தது தனக்கு எந்தவித வருத்தமும் அளிக்கவில்லை என்றும், புனித நூலை அவமதித்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் சரவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
சண்டிகர்:
அரியானா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சிங்கு பகுதியில், லக்பீர் சிங் (வயது 35) என்ற தலித் சீக்கியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பேரிகார்டில் தொங்கவிடப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலைக்கு நிஹாங் சீக்கிய குழு பொறுப்பேற்றுள்ளது. சீக்கிய மதத்தின் புனித நூலை அவமதித்ததால் கொன்றதாக தெரிவித்துள்ளது.
இந்த கொலை தொடர்பாக நிஹாங் அமைப்பைச் சேர்ந்த சரவ்ஜித் சிங் என்பவர் நேற்று மாலை போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, லக்பீர் சிங்கை கொலை செய்தது தனக்கு எந்தவித வருத்தமும் அளிக்கவில்லை என்றும், புனித நூலை அவமதித்ததால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்றும் சரவ்ஜித் சிங் தெரிவித்துள்ளார். அவரை 7 நாளில் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி அவரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த கொடூர கொலை தொடர்பாக, நிஹாங் அமைப்பைச் சேர்ந்த மற்றொருவர் இன்று அமிர்தசரஸ் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாகவும் அமிர்தசரஸ் டிஎஸ்பி தெரிவித்தார்.