செய்திகள்
கோப்பு படம்

தரம் உயருகிறது - மாநகராட்சி ஆஸ்பத்திரிகளில் கூடுதல் வசதிகள்

Published On 2020-02-27 09:54 GMT   |   Update On 2020-02-27 09:54 GMT
மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்தவும், பல்வேறு வசதிகளையும், மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை-எளிய மக்கள் இலவசமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக 140 நகர ஆரம்ப சுகாதார மையங்கள் மாநகராட்சி மூலம் நடத்தப்படுகின்றன.

இந்த மருத்துவமனைகளில் தினமும் 150 முதல் 175 பேர் வரை சிகிச்சை பெறுகின்றார்கள். பொதுவான மருத்துவ சிகிச்சை, பெண்களுக்கான மருத்துவ சிகிச்சை, பல்வேறு பரிசோதனை செய்யக்கூடிய ஆஸ்பத்திரிகளும் இதில் இயங்குகின்றன.

இந்த ஆஸ்பத்திரிகளில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அதன் செயல்பாடு பற்றியும் பொதுமக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. ஒருசில இடங்களில் இந்த மருத்துவமனைகள் இருப்பதே அந்த பகுதி மக்களுக்கு தெரியவில்லை.

மாநகராட்சி மருத்துவமனையில் மக்களுக்காக வழங்கப்படும் மருத்துவசேவைகள் பற்றி தெரியாமல் இருப்பதால் அதனை மேம்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டது.

மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆரம்ப சுகாதார மையங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகளையும், தரத்தையும் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து நகர ஆரம்ப சுகாதார நிலையங்களை எளிதில் அடையாளம் காணவும் சிகிச்சை பெற வசதியாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அனைத்து மருத்துவமனைகளுக்கும் லோகோ, முகப்பு தோற்றம், பெயர் பலகை, அதில் உள்ள வசதிகள் குறித்து மக்களுக்கு தெரியும் வகையில் அமைக்கவும் பரிசீலிக்கப்படுகிறது.

மருத்துவமனையின் தரத்தை உயர்த்தும் வகையில் கூடுதலாக 181 வசதிகள் பொதுமக்களுக்கு கிடைக்க திட்டமிடப்படுகிறது. 36 மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்கள் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை வருகை தந்து சிகிச்சை அளிக்கிறார்கள். இதனை இன்னும் கூடுதலாக்க முடிவு செய்யப்பட்டது.

தண்டையார்பேட்டை, எஸ்.எம்.நகர், புளியந்தோப்பு காசநோய் மருத்துவமனை ஆகியவை பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்றுள்ளது. பொதுவாக மருத்துவ சிகிச்சை அளிக்கக்கூடிய இந்த ஆஸ்பத்திரிகளில் குறைந்தது 100 பேராவது சிகிச்சை பெற வேண்டும். அந்த வகையில் சேவை மேம்படுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி மருத்துவமனையில் வழங்கக்கூடிய சிகிச்சைகளை இன்னும் மேம்படுத்தி பொது மக்களுக்கு கூடுதலான சேவை வழங்க திட்டமிடப்படுகிறது. நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்தவும், கூடுதலாக டாக்டர்களை நியமிக்கவும் முடிவு செய்யப்படுகிறது.

மாநகராட்சி மூலம் நடத்தப்படும் மருத்துவமனைகள், பரிசோதனை கூடங்களை பொதுமக்கள் இன்னும் அதிகளவு பயன்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
Tags:    

Similar News