செய்திகள்
ஊரடங்கை மீறி மறைமுகமாக செயல்பட்ட கடைகளுக்கு சீல்
கரூரில் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக செயல்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கரூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்ததால் சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் உள்பட 11 மாவட்டங்களில் தொற்று இன்னும் குறையாததால் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் கரூர் பஸ் நிலையம் எதிரே உள்ள வடக்கு முருகநாதபுரம், தெற்கு முருகநாதபுரம் ஆகிய பகுதிகளில் வடமாநில வியாபாரிகள் எலக்ட்ரிக்கல்-எலக்ட்ரானிக்ஸ் கடைகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி மறைமுகமாக கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் சுதா உத்தரவின்பேரில், வடக்கு முருகநாதபுரம், தெற்கு முருகநாதபுரம் ஆகிய பகுதிகளில் மறைமுகமாக செயல்பட்டு வந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.
மேலும், விற்பனையை தடுக்கும் விதமாக அப்பகுதிகளில் பொதுமக்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் விதமாக தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.