உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் தாசில்தாரிடம் 72 வயது முதியவர் கோவிந்தன் மனு அளித்த காட்சி

ஜெயங்கொண்டம் அருகே உயிரோடு இருந்தவரை இறந்தவர் பட்டியலுக்கு மாற்றிய பரிதாபம்

Published On 2022-01-12 07:02 GMT   |   Update On 2022-01-12 07:02 GMT
ஜெயங்கொண்டம் அருகே உயிரோடு இருந்தவரை இறந்தவர் பட்டியலுக்கு மாற்றியதால் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் தாசில்தார் அலுவலகத்திற்கும் வங்கிக்கும் அலைந்து வருகிறார்.
ஜெயகொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 72). வயது மூப்பின் காரணமாக அரசு வழங்கும் ரூ.1,000 உதவித்தொகையினை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறார்

இந்த நிலையில் இம்மாதத்திற்கான உதவித் தொகை பணத்தை எடுக்க வங்கியின் சேவை மையத்திற்கு அவர் சென்றார். அவரது வங்கி கணக்கில் போதிய அளவில் பணம் இருந்தும் நிலையில் கைரேகை பதிவு ஆகாததால் பணம் எடுக்க முடியவில்லை.

இதனால் அடுத்த கட்டமாக ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கிக்கு கோவிந்தன் நேரில் சென்றார். அங்கு காசோலை எழுதிக் கொடுத்து பணம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரி நீங்கள் இறந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை என கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தன், என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகளிடம் கேட்டார். அதற்கு நீங்கள் உயிருடன் இருப்பதற்காக சான்றிதழை கிராம நிர்வாக அதிகாரியிடம் வாங்கி வருமாறு கூறியுள்ளனர்.

பின்னர் கோவிந்தன் கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து வாழ்நாள் சான்றிதழ் வழங்குமாறு கேட்டார். அவர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழையும் வழங்கினார். அதனை கொண்டு சென்று வங்கி நிர்வாகத்திடம் அளித்தபோது வங்கி நிர்வாகம் ஏற்க மறுத்து மீண்டும் தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வாங்க 72 வயதுடைய முதியவர் கோவிந்தன் அலைந்து வருகிறார்.

ஜெயங்கொண்டம் தாசில்தார் அலுவலகத்தில் தான் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழ் வழங்க மனு அளித்துள்ளார். அவருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் முதியவரை அனுப்பி வைத்தார்.


Tags:    

Similar News