செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல்- 2 பேர் கைது

Published On 2019-12-12 17:26 GMT   |   Update On 2019-12-12 17:26 GMT
மயிலாடுதுறையில் போலீஸ் ஏட்டை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை பஸ் நிலைய வாசலில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு நேற்று போலீஸ் ஏட்டு பாலு பணியில் இருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பஸ் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அதற்கு பாலு, அவர்களை மோட்டார் சைக்கிளுடன் செல்லக்கூடாது என தடுத்து நிறுத்தினார். ஆனால் அவர்கள் அதையும் மீறி மோட்டார் சைக்கிளில் உள்ளே செல்ல முயன்றனர். இதனால் போலீஸ் ஏட்டு பாலுவுக்கும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், பாலுவை தாக்கி, கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் புறக்காவல் நிலையத்தில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து பாலு கொடுத்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்ட போது மயிலாடுதுறை பெரிய கண்ணாரத்தெருவில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள், மயிலாடுதுறை அருகே தத்தங்குடி பகுதியை சேர்ந்த அன்புசெழியன் மகன் அசோக் (வயது 20), அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் பிரவீன்பாபு (24) என்பதும், அவர்கள் போலீஸ் ஏட்டு பாலுவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார், அசோக், பிரவீன்பாபு ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News