செய்திகள்
கலப்பு திருமணத்தை ஆதரிக்கும் சித்தராமையாவுக்கு பாஜக கண்டனம்
மத கலப்பு திருமணங்கள் ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதாகவும், இதை தடை செய்வது சாத்தியமில்லை என்றும் கருத்து கூறியுள்ள சித்தராமையாவுக்கு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பெங்களூரு :
கர்நாடகத்தில் லவ் ஜிகாத் (இந்து-முஸ்லிம் கலப்பு மத திருமணம்) தடை செய்ய புதிய சட்டத்தை கொண்டு வர உள்ளதாக ஆளும் பா.ஜனதா கூறியுள்ளது. இதை கண்டித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மத கலப்பு திருமணங்கள் ஆண்டாண்டு காலமாக நடந்து வருவதாகவும், இதை தடை செய்வது சாத்தியமில்லை என்றும் கூறினார். இந்த கருத்தை கூறியுள்ள சித்தராமையாவுக்கு கர்நாடக பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சித்தராமையா மற்றும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனநிலை ஒன்றாக உள்ளது. இஸ்லாமிய நாட்டை உருவாக்க ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம் பெயரை பயன்படுத்துகிறது. சித்தராமையா தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக்கொள்ள முஸ்லிம் பெயரை பயன்படுத்துகிறார். இவர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு தான் அவப்பெயர் ஏற்படுகிறது.
பெரிய ஆலமரம் முறிந்து விழும்போது, நடுக்கம் ஏற்படுவது சகஜம் என்ற வாதத்தை சித்தராமையா சற்று நினைவுபடுத்தி கொள்ள வேண்டும். 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ராஜீவ்காந்தி தான் இந்த கருத்தை கூறினார். அன்று சீக்கியர்களை துரத்தி தாக்கிய காங்கிரசார் இன்று அந்த சமூகத்தினரை பார்த்து முதலை கண்ணீர் வடிக்கிறார்கள்.
இவ்வாறு அதில் பா.ஜனதா குறிப்பிட்டுள்ளது.