செய்திகள்
பிரதமர் மோடியுடன் ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
இந்தியா வந்துள்ள ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
சா்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடா்பான ‘ரெய்சினா பேச்சுவார்த்தை’ மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் 7 நாடுகளின் முன்னாள் பிரதமா் மற்றும் தலைவா்கள் பங்கேற்று உலகளாவிய சவால்கள் குறித்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாது 100 நாடுகளில் இருந்து 700 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். ரஷியா, ஈரான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சா்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்ற ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
ரெய்சினா மாநாட்டில் பேசிய செர்ஜி லாவ்ரோவ், ‘உலகளாவிய வளர்ச்சி என்பது பொருளாதார வலிமை, நிதி ஆதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவற்றின் புதிய மையங்களை உருவாக்குவதற்கான புறநிலை செயல்முறை என நாங்கள் நம்புகிறோம். வெளிப்படையாக கூறினால் இந்தியாவும் அவற்றில் ஒன்று. இந்தியாவும் பிரேசிலும் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இருக்க வேண்டும். வளரும் நாடுகளுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.
‘ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த எங்களின் பரந்த உரையாடல் நீண்டகால நட்பை பிரதிபலித்தது’ என டாக்டர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அதேபோல், செர்ஜி லாவ்ரோவ் பிரதமர் மோடியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.