ஆன்மிகம்
கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் சாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது

கபாலீசுவரர் கோவில் பங்குனி திருவிழா: அதிகார நந்தி வாகனத்தில் சாமி, அம்பாள் திருவீதி உலா

Published On 2021-03-22 05:00 GMT   |   Update On 2021-03-22 05:00 GMT
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் சாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.
சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கபாலீசுவரர் சாமி அதிகார நந்தி வாகனத்திலும், கற்பகம்பாள் கந்தருவி வாகனத்திலும், முருகன் கந்தருவன் வாகனத்திலும், மூஷிகம் வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.

கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள தெப்பக்குள படித்துறையில் காலை 9 மணி அளவில் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடந்தது. இரவு பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் சாமி, அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டு திருவிழாவான பங்குனி திருவிழா நடந்து வருகிறது. நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு பிறப்பித்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாத பக்தர்களுக்கு முக கவசம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வெப்பநிலையை சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பங்குனி திருவிழாவின்போது, மயிலாப்பூரில் உள்ள 4 மாட வீதிகள், கச்சேரி சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை உள்ளிட்ட தெருக்களில் உணவு மற்றும் மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதனை வினியோகிக்க வேண்டாம் என்று அறக்கட்டளைகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாக்களும் ‘யூடியூப்’ சேனலில் ஒளிபரப்பப்படுவதால் பக்தர்கள் நேரில் வருவதை தவிர்க்கலாம்.
Tags:    

Similar News