செய்திகள்
கைது

சேலம் ஆட்டோ டிரைவர் கொடூர கொலை- நண்பர் உள்பட 4 பேர் சிக்கினர்

Published On 2019-11-05 10:50 GMT   |   Update On 2019-11-05 10:50 GMT
சேலத்தில் ஆட்டோ டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
சேலம்:

சேலம் பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கு பின்புறம் உடையார்காடு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று காலை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும்அந்த பகுதியில் உள்ள கேமிரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது கொலை செய்யப்பட்டது தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டைச் சேர்ந்த முருகன் மகன் ரமேஷ் (வயது 26) என்பதும், அவர் ஷேர் ஆட்டோ டிரைவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் ரமேஷை நேற்று முன்தினம் அவரது நண்பரான மற்றொரு ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவர் அழைத்துச் சென்றதும், அவரை தேடியபோது அவர் தலைமறைவானதும் தெரியவந்தது.

மேலும் பள்ளப்பட்டி இன்ஸ்பெக்டர் சாலைராம் சக்திவேல் தலைமையிலான தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு இடத்தில் பதுங்கி இருந்த வெங்கடேஷ் உள்பட இந்த கொலையில் தொடர்புடைய 4 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

வெங்கடேசனின் உறவினரான 19 வயது பெண் ஒருவரிடம் ரமேஷ் நெருங்கி பழகினார். இதனை அறிந்த வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு ரமேஷிடம் கூறினர். ஆனால் ரமேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் ரமேஷை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் இரவு பள்ளப்பட்டி உடையார்காடு பகுதிக்கு ரமேஷை அழைத்துச் சென்றனர். அங்கு வைத்தும் அந்த பெண்ணை திருமணம் செய்யுமாறு ரமேஷிடம் கூறினர். அப்போதும் அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அவரை கல்லால் தாக்கினர்.

இதில் நிலைகுலைந்த ரமேஷ் ஓட்டம்பிடித்தார். ஆனாலும் விரட்டிச் சென்ற அந்த கும்பல் தொடர்ந்து முகம் உள்பட பல்வேறு பகுதிகளில் கல்லால் தாக்கியது. இதனால் ரமேஷ் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார், சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனைப் பார்த்த அந்த கும்பல் ரமேஷின் உடலை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டது. ஆனாலும் கொலை நடந்த மறுநாளே தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கொலையாளிகளை பிடித்துள்ளோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதில் தொடர்புடைய ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News