செய்திகள்
மணிகண்டன்

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

Published On 2019-11-04 16:21 GMT   |   Update On 2019-11-04 16:21 GMT
ஆரணி அருகே நீச்சல் தெரியாததால் பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சோமந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களது மகன் மணிகண்டன் (வயது 10), அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று அவன் தனது நண்பர்களுடன் அங்குள்ள அப்பனாச்சி ஏரிக்கு குளிக்க சென்றான்.

அங்கு அனைவரும் ஏரியில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது மணிகண்டன் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுள்ளான். நீச்சல் தெரியாத காரணத்தால் அவன் தண்ணீரில் மூழ்கினான். இதைக்கண்ட நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆழமான பகுதி மற்றும் நீச்சல் தெரியாததால் அவர்களால் மணிகண்டனை காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து கிராமத்துக்கு சென்று மணிகண்டன் ஏரியில் மூழ்கியது குறித்து அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக ஏரிக்கு வந்தனர். தண்ணீரில் மூழ்கிய மணிகண்டனை தேடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர். சிறிதுநேரத்துக்கு பின்னர் உயிரிழந்த நிலையில் அவன் மீட்கப்பட்டான். உடலை கண்டு குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அவர்கள் இறுதிசடங்கு செய்வதற்காக உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் தலைமையிலான போலீசார், சரவணன் வீட்டுக்கு சென்று மணிகண்டன் உடலை வாங்கி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News