தஞ்சை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது: ஆண்டிப்பட்டி அமமுக பிரமுகர் பலி
வல்லம்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கே.கே.புரத்தை சேர்ந்தவர் கருப்பு என்கிற ராஜன் (வயது44). இவர் ஆண்டிப்பட்டி அ.ம.மு.க. தெற்கு ஒன்றிய இணை செயலாளராக உள்ளார்.
இவருடைய மனைவி நிஷாந்தி ஆண்டிப்பட்டி அருகே உள்ள மொட்டுனுத்து ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். நேற்று காலை தேனியில் இருந்து காரில் தஞ்சையில் மரணமடைந்த சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராஜன் தஞ்சைக்கு வந்து கொண்டிருந்தார்.
காரில் இவருடன் 2 பேர் இருந்தனர். காரை தேனியை சேர்ந்த பிரபாகர் என்பவர் ஓட்டி வந்துள்ளார். கார் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வந்தபோது அந்த பகுதியில் உள்ள முருகன் காலனி அருகே காரின் பின் டயர் திடீரென வெடித்தது.
இதில் நிலை தடுமாறிய கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் மற்றும் அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காரில் இருந்த 4 பேரையும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராஜனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் காயமடைந்த தேனியை சேர்ந்த அமிர்தம், அமுசு, கார் டிரைவர் பிரபாகர் ஆகிய 3 பேரும் மேல்சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.