உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வன பகுதிகளில் மட்டும் மூன்று காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் உயிரிழந்தது
ஆனைமலையில் வனப்பகுதியில் இறந்து கிடந்த யானை
கோவை:
ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேத்துமடை கிழக்குப் பிரிவு மங்கரை என்னும் பகுதியில் வனத்துறை ஊழியர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொண்டு இருந்தனர்.
அப்போது சின்னசல்லகட்டி சரக பகுதியில் வந்து கொண்டிருந்த போது யானை தரையில் சாய்ந்து கிடந்ததை கண்ட வனத்துறை ஊழியர்கள் அருகில் சென்று பார்த்தபோது ஒரு பெண் காட்டுயானை இறந்து கிடப்பது தெரியவந்தது.
வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இறந்த யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்ய முடிவு செய்து கோவை வன கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்று அதற்கான பணிகள் முடுக்கி விடப்படும் என்றும், உடல்கூறு ஆய்வின் அறிக்கை வந்த பின்னரே யானையின் இறப்பு குறித்த காரணம் தெரியும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை பொள்ளாச்சி மற்றும் டாப்சிலிப் வன பகுதிகளில் மட்டும் மூன்று காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.