செய்திகள்
கோப்புபடம்

பெரியநாயக்கன்பாளையம் அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2021-10-09 11:05 GMT   |   Update On 2021-10-09 11:05 GMT
பெரியநாயக்கன்பாளையம் அருகே தங்க நகையை பறித்து சென்ற 2 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த தாயனூர் காலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி நீலாவதி (வயது 34). இவர் வீட்டில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார்.

சம்பவத்தன்று அவர் தனது மொபட்டின் கடனை கட்டுவதற்காக துடியலூருக்கு மொபட்டில் சென்றார். பின்னர் கடனை அடைத்து விட்டு வீடு திரும்பினார். அப்போது ஜி.கவுண்டம்பாளையம் அருகே வந்த போது 25 வயது மதிக்கதக்க 2 வாலிபர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.

அந்த வாலிபர்கள் திடீரென நீலாவதியின் அருகில் சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னல் அமர்ந்து இருந்த வாலிபர் நீலாவதியின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க செயினை பறிக்க முயற்சி செய்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் செயினை கெட்டியாக பிடித்து கொண்டார்.அப்போது அந்த வாலிபர்கள் நீலாவதியை தள்ளிவிட்டு பாதி செயினை பறித்தனர். கீழே விழுந்ததும் அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

பின்னர் அங்கிருந்தவர்கள் பலத்த காயம் அடைந்த நீலாவதியை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து நீலாவதி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகையை பறித்து சென்ற 2 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News