வழிபாடு
தெப்பம் வலம் வந்த போது எடுத்த படம், தியாகராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தகாட்சி.

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தியாகராஜசாமி பாத தரிசனம் கொடுக்கும் நிகழ்ச்சி

Published On 2022-02-19 05:04 GMT   |   Update On 2022-02-19 05:04 GMT
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தியாகராஜசாமி பாத தரிசனம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.

பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தெடங்கியது.

மாசிமக விழாவின் ஒரு பகுதியாக தியாகராஜசாமி பாத தரிசனம் கொடுத்து இருப்பிடத்துக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக ஹம்சநடன புவனி விடங்க தியாகராஜசாமி தேரில் வீதி உலா வந்து வசந்த மண்டபம் எழுந்தருளினார். பின்னர் வசந்த மண்டபத்தில் இருந்து பாத தரிசனம் அளித்து விட்டு, புறப்பட்டு இருப்பிடம் வந்தடைந்தார்.

இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, கோவில் செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், ஸ்தலத்தார்கள் கயிலைமணி வேதரத்னம், கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் வித்வான் கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடந்தது.

இதை தொடர்ந்து நேற்று இரவு தெப்பத்திருவிழா நடந்தது.இதை முன்னதாக கல்யாணசுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் சேதுபதி மண்டபத்திற்கு எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் மணிகர்ணிகை என அழைக்கப்படும் தீர்த்த குளத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டா் சுப்ரியா தலைமையில் போலீசாா், ஊர்காவல்படையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.. விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு தலைமையில் வர்த்தக சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News