ஆன்மிகம்
வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

சஷ்டியையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-10-12 05:24 GMT   |   Update On 2021-10-12 05:24 GMT
பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியையொட்டி நேற்று நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. நாமக்கல்லில் மோகனூர் சாலை காந்தி நகர் பாலதண்டாயுதபாணி கோவிலில் சஷ்டியையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை தொடங்கியது.

தொடர்ந்து சாமிக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி திருநீறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர், அருணகிரி மலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதேபோல் ராசிபுரம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
Tags:    

Similar News