செய்திகள்
கோப்பு படம்

நாகை அருகே இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

Published On 2020-02-10 10:29 GMT   |   Update On 2020-02-10 10:29 GMT
தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி இறந்தவர் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் வடக்குபொய்கை நல்லூரில் காந்திமகான் தெரு, உழவர் தெரு, சிவன்கோயில் தெரு, சுனாமி குடியிருப்பு ஆகியவை உள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இவர்களுக்கு தனி சுடுகாடு இல்லை. தனி சுடுகாடு அமைத்து தர வேண்டும் என்று கோரி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள்.

இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இறந்த விட்டால் பறவையாற்றில் இறங்கிதான் சடலத்தை சுமந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. பரவையாற்றில் கடல் நீர் ஏறினால் ஆள் உயரத்திற்கு தண்ணீர் ஓடும். எனவே சடலத்தை கொண்டு செல்ல இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல ஆண்டு காலம் கோரிக்கையை முன் வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த சித்தானந்தம் இறந்து விட்டார். அவரது சடலத்தை வடக்கு பொய்கை நல்லூர் பிரதான சாலையில் இறந்தவர் சடலத்தை வைத்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்த்தால் நாகப்பட்டினம் -வேளாங்கண்ணி சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நாகை தாசில்தார் பிரான்சிஸ், டி.எஸ்.பி. முருகவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

முடிவில், 2½ ஏக்கர் அரசு நிலத்தில் தனி சுடுகாடு அமைத்து தருவதாக தாசில்தார் உறுதியளித்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News