செய்திகள்
கோப்பு படம்

புதிய பாராளுமன்ற கட்டிட பணிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

Published On 2021-01-05 05:46 GMT   |   Update On 2021-01-05 05:46 GMT
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிட பணிகளை தொடர்ந்து நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுடெல்லி:

971 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பாராளுமன்ற கட்டிடமும் மற்றும் வளாகங்களை அமைக்கும் பணியினை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

சென்ட்ரல் விஸ்டா என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்திற்கு கடந்த டிசம்பர் 10-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டிட பணிகளை 2022-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த திட்டத்திற்காக பல்வேறு சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறாமல் உள்ளது எனவும், எனவே இந்த திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதி கான்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டு கடந்த நவம்பர் 5-ந்தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் விதமாக சில நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதனையடுத்து இது தொடர்பாக அவசரமாக விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வழக்கில் தீர்ப்பு வரும் வரை கட்டுமான பணிகளையோ, கட்டிடம் இடிக்கும் பணிகளையோ மேற்கொள்ளக் கூடாது, ஆனால் ஆய்வு பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிடம் மற்றும் வளாகம் அமைப்பதற்கு தடை விதிக்ககோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு வழங்கிய அந்த தீர்ப்பில் புதிய பாராளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட செண்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட பணியின் போது தூசி பரவலை தடுக்க கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
Tags:    

Similar News