தொழில்நுட்பம்
மத்திய அரசு உத்தரவுக்கு எதிராக சட்ட போராட்டம் துவங்கிய வாட்ஸ்அப்
மத்திய அரசு பிறப்பித்து இருக்கும் விதிமுறைகளை ஏற்கும் விவகாரத்தில் வாட்ஸ்அப் வழக்கு தொடர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு அறிவித்து இருக்கும் புதிய விதிமுறைகளை தடை செய்ய வலியுறுத்தி வாட்ஸ்அப் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறைகள் பேஸ்புக் மற்றும் இதர நிறுவனங்கள் வழங்கி வரும் பிரைவசி பாதுகாப்பை மீறும் வகையில் இருப்பதாக வாட்ஸ்அப் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், வாட்ஸ்அப் தொடர்ந்து இருக்கும் வழக்கில் புது விதிமுறைகள் இந்திய அரசியலமைப்பின் தனியுரிமை கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறது என உயர்நீதிமன்றம் உத்தரவிட கோரியுள்ளது. தகவலை முதலில் உருவாக்கியவர் விவரங்களை அரசு கோரும் பட்சத்தில் அதனை வழங்க புது விதிமுறைகளில் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் செயலியில் அனைத்து சாட்களும் முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுவதால், அந்த விவரங்களை வழங்க முடியாது என வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாட்ஸ்அப் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. புது விதிமுறைகளை ஏற்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு 90 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.