செய்திகள்
மதுக்கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
மது குடித்துவிட்டு, பள்ளி கல்லூரிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக அளவில் இடையூறு கொடுத்து வருகிறார்கள்.
திருப்பூர்:
இடைஞ்சலாக உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டுமென திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்திலிருந்து கல்லூரிசாலையில் 2 கி.மீ. தூரத்தில் உள்ளது கொங்கணகிரி. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும் உள்ளது. இதனால் திருப்பூரிலும்அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கடவுளை தரிசிக்க இங்கு வருகின்றனர்.
இந்த நிலையில் கொங்கணகிரி பஸ் நிறுத்தத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுக்கடையால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் மங்கலம் சாலையில் அமைந்துள்ள குமரன் மகளிர் கலைக்கல்லூரியை சார்ந்த பெரும்பான்மையான மாணவிகள் கொங்கணகிரி சாலையை கடந்துதான் கல்லூரி செல்கின்றனர்.
சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயிலும் மேல்நிலைப்பள்ளியும் இங்குதான் உள்ளது. மேலும் இப்பகுதியில் பல பள்ளிகள் உள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் இந்தக் கல்லூரி சாலையை கடந்து செல்ல வேண்டும்.
ஆனால் மதுக்கடை இருப்பதால் மது குடித்துவிட்டு பள்ளி கல்லூரிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிக அளவில் இடையூறு கொடுத்து வருகிறார்கள்.
குறிப்பாக மதுமயக்கத்தில் ரோட்டிலேயே விழுந்து கிடப்பதுடன்அவர்கள் பயன்படுத்தும் வாகனங்களையும் ரோட்டிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே உடனடியாக மதுக்கடையை அகற்ற வேண்டும் அல்லது மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.