செய்திகள்
துப்பாக்கிச்சூடு

காஷ்மீரில் பட்டப்பகலில், பொதுமக்கள் கூடியிருந்த நிலையில் 2 போலீசாரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி

Published On 2021-02-19 12:26 GMT   |   Update On 2021-02-19 12:26 GMT
காஷ்மீரில் பட்டப்பகலில், பொதுமக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதியில் இரண்டு போலீசாரை பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் இன்று பட்டப்பகலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீநகரின் பகத் பார்ஜுல்லா என்ற இடத்தில் ஏராளமான கடைகள் உள்ளன. அங்கிருந்த டீக்கடை ஒன்றில் போலீசார் இருந்தனர். அப்போது திடீரென போலீசார் மீது பயங்கரவாதி ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதனால் அப்பகுதியில் அசாதரண சூழ்நிலை ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் பிழைத்தால் போதும் என ஓடினார்கள். இதைப் பயன்படுத்தி அந்த பயங்கரவாதி அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். போலீசார் அந்த பகுதியை முற்றுகையிட்டு பயங்கரவாதியை தேடிவருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களில் இது 2-வது தாக்குதல் ஆகும். நேற்று முன்தினம் மிகுந்த பாதுகாப்பு பகுதியில் இருக்கும் துர்கனாக் பகுதியில் ரெஸ்டாரன்ட் நடத்தி வருபவரின் மகனை பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டான். இந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 

இன்று காலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்புப்படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இது புத்காம் மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் நடைபெற்றது.
Tags:    

Similar News