உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் இருதரப்பினர் மோதல் - டிரைவருக்கு கத்திக்குத்து
கும்பலில் இருந்த ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருக்கண்ணனின் முதுகு, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் குத்தியதாக கூறப்படுகிறது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள சேடபாளையத்தை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது 40). தனியார் மினி பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீடு அருகே புதிதாக வாடகைக்கு சிலர் வந்ததாக கூறப்படுகிறது.
இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் இதனை திருக்கண்ணன் தட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திருக்கண்ணனை வழிமறித்த 3 வாலிபர்கள், 1பெண் ஆகியோர் கொண்ட கும்பல் அவரை கைகளால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருக்கண்ணனின் முதுகு, கழுத்து, மார்பு ஆகிய இடங்களில் குத்தியதாக கூறப்படுகிறது .
இதனால் படுகாயம் அடைந்த திருக்கண்ணன் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.