செய்திகள்
விருதுநகர் வாக்குச்சாவடியில் அதிகாரிகள் பூத் சிலிப் கொடுக்க போலீசார் கடும் எதிர்ப்பு
விருதுநகர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலை நீடித்தது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.
விருதுநகர்:
தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பூத் சிலிப் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் பூத் சிலிப் கொடுக்க தேர்தல் ஆணையம் தடை விதித்தது. அரசு சார்பில் பூத் சிலிப் அனைத்து வீடுகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 4-ந்தேதி முதல் பூத் சிலிப் அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை.
விருதுநகர் சட்டமன்ற தொகுதியிலும் இதே நிலை நீடித்தது. இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் வாக்குப் பதிவு நாளான இன்று விருதுநகர் சந்திமரத் தெருவில் உள்ள எஸ்.எம்.ஜி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப்பை அரசு அதிகாரிகள் வழங்கினர்.
இதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இங்கு வைத்து பூத் சிலிப் வழங்கக்கூடாது என அவர்கள் கூறினர். இதனால் வாக்களிக்க வந்தவர்கள் வாக்களிக்காமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மாவட்ட பா.ஜனதா தலைவர் கஜேந்திரன் அங்கு வந்து போலீசாரிடம் பேசினார். பூத் சிலிப் கொடுப்பது அரசு அதிகாரிகள்தான். இதில் தவறு என்ன? என அவர் கேட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வாக்குச்சாவடியின் வெளியே நின்று பூத் சிலிப் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.