உள்ளூர் செய்திகள்
மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விசைப்படகு உரிமையாளர்கள்
மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி:
புதுவை அரசின் மீன்வளத்துறை சார்பில் விசைப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு டீசல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதம் வரை லிட்டருக்கு ரூ.15 மானியம் வழங்கப்பட்டு வந்தது. அதன்பிறகு மானியம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
விசைப்படகு உரிமையாளர்கள் கவர்னர், முதல்-அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மீன்வளத்தறை இயக்குனரை சந்தித்து டீசல் மானியத்தை தொடர்ந்து வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால் இதுவரை மானியம் வழங்கப்படவில்லை. இதையடுத்து இன்றைய தினம் புதுவை தேங்காய்திட்டில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் அலுவலகத்தை விசைப்படகு உரிமையாளர்கள் முற்றுகையிட்டனர். இயக்குனர் பாலாஜியிடம், தங்கள் டீசல் மானிய புத்தகத்தை ஒப்படைத்தனர். தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் கூறும்போது, வருகிற திங்கள் கிழமைக்கும் டீசல் மானியம் குறித்து முடிவெடுத்து அறிவிக்காவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.