செய்திகள்
மகாராஷ்டிரா தேர்தல் - கோப்புப்படம்

அதற்குள் தேர்தல் அறிவிப்பு வெளியானதா? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

Published On 2019-09-17 07:17 GMT   |   Update On 2019-09-17 07:17 GMT
மகாராஷ்டிரா மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் பற்றிய தகவல்கள் அடிக்கடி வெளியாகி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக கடிதம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதனை உண்மையென பலர் தேர்தல் அட்டவணையை பகிர்ந்து வருகின்றனர். வைரல் பதிவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 15 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. தற்சமயம் வைரலாகும் வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கை தேதிகள் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அறிவிக்கப்பட்டதாகும். 



மத்திய தேர்தல் ஆணைய வலைத்தளம் மற்றும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 2019 மகாராஷ்டிரா தேர்தல் தேதிகள் பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. எனினும், விரைவில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஹரியானா மாநில சட்டமன்றத்திற்கான தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2014 ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அந்த வகையில் தற்சமயம் வைரலாகும் தேதிகள் போனமுறை வெளியான அறிவிப்புகளை அப்பட்டமாக தழுவி உருவாக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல் பகிர்ந்து கொள்வது வீண் பதற்றத்தை ஏற்படுத்தும்.
Tags:    

Similar News