வழிபாடு
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2022-02-15 07:16 GMT   |   Update On 2022-02-15 07:16 GMT
மாசி மகப்பெருவிழாவையொட்டி திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. 5 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டு 108 திவ்ய தேசங்களுள் 17-வது தலமாக போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகபெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசி மக பெருவிழா கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முன்னதாக பெருமாள், தாயார், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் தேருக்கு எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் ரா.ராதாகிருட்டிணன், தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் ராஜா, கோவில் ஊழியர்கள் மற்றும், திருக்கண்ணபுரம் பகுதி கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விழா நாட்களில் தங்க கருட சேவை, தங்க பல்லக்கு மற்றும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா நடைபெற்றது. நாளை காலை சவுரிராஜபெருமாள் புறப்பட்டு திருமருகல் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து அங்குள்ள வரதராஜபெருமாளுடன் சேர்ந்து 2 பெருமாள்களும் தீர்த்தவாரிக்கு திருமலைராஜன்பட்டினம் கடற்கரைக்கு செல்லும் நிகழ்ச்சியும், அன்று மாலை கடற்கரையில் பெருமாள் கருட வாகனத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது.

21-ந் தேதி(திங்கட்கிழமை) இரவு 10 மணிக்கு சவுரிராஜப்பெருமாள் கோவில் முன் அமைந்துள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர், கிராம மக்களும் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News