செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கோவில் சொத்துகளை வழங்கும் அரசாணையை அமல்படுத்த மாட்டோம் - ஐகோர்ட்டில் அரசு உத்தரவாதம்

Published On 2019-09-20 22:49 GMT   |   Update On 2019-09-20 22:49 GMT
கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து குடியிருப்பவர்களுக்கு அந்த நிலத்தை வழங்குவதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த மாட்டோம் என்று சென்னை ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் உத்தரவாதம் அளித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில் சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் வருவாய்துறை செயலர் கடந்த ஆகஸ்டு 30-ந் தேதி பிறப்பித்துள்ள ஒரு அரசாணையில், கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றில் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு அந்த நிலம் வழங்கப்படும். அதற் கான பட்டாவும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கோவில் நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்க வருவாய்துறை செயலருக்கு எந்த அதிகாரமும் இல்லை.

கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் அந்த கோவிலுக்கு கிடைக்கும் வருமானத்தில் வாங்கப்பட்டவை அல்ல. இறைப்பணிக்காக கோவிலுக்கு தானம், தர்மம் செய்யும் வசதிபடைத்தவர்கள் மற்றும் தமிழகத்தை ஆண்ட அரசர்களால் நன்கொடையாக வழங் கப்பட்டவை. இந்த நிலங்களின் மூலமாக கிடைக்கும் வருவாயைக் கொண்டுதான் கோவில்களில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் திருப்பணிகள் நடத்தப்படுகின்றன.

அந்த நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதுதான் அரசு அதிகாரிகளின் வேலையே தவிர, அந்த நிலத்தை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா போட்டு கொடுப்பது என்பது வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தான் உள்ளது. இதன்மூலம் தமிழக அரசே ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கிறது. எனவே இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசே இதுபோல அரசாணை வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்கமுடியாது. கோவில் சொத்துகளை பாதுகாக்கும் பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உண்டு. ஆனால் இந்த அரசாணை அந்த சொத்துகளை தனியார் சுலபமாக எடுத்துக்கொள்ளவும், அதிகாரிகளே விற்பனை செய்யவும் வழிவகை செய்யும் வகையில் உள்ளது’ என்று கருத்து தெரிவித்தனர்.

அதற்கு பதில் அளித்த அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், ‘இந்த வழக்கில் அரசின் கருத்தை கேட்டு விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்படும். அதுவரை இந்த அரசாணையை அமல்படுத்த மாட்டோம். அதன்படி எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம்’ என்று உத்தரவாதம் அளித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News