செய்திகள்
கோப்புப்படம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே நடவடிக்கை

Published On 2021-04-19 00:35 GMT   |   Update On 2021-04-19 00:35 GMT
நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படும் திரவ ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச்செல்வதற்காக ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்த தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் இந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

எனவே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் இருந்து ரெயில் மூலம் ஆக்சிஜனை கொண்டு வருவதற்கு ரெயில்வேத்துறையின் உதவியை மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் நாடியுள்ளன. திரவ மருத்துவ ஆக்சிஜன் மற்றும் சிலிண்டர்களை எடுத்து வருவதற்காக சரக்கு ரெயில்களை இயக்க கோரியிருந்தன.

இந்த கோரிக்கைகளின் அடிப்படையிலும், நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஆக்சிஜன் தேவையை கருத்தில் கொண்டும் சிறப்பு சரக்கு ரெயில்களை இயக்க ரெயில்வே முடிவு செய்துள்ளது.

‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படும் இந்த டேங்கர் ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் தங்கள் இயக்கத்தை தொடங்குகின்றன. அந்தவகையில் மும்பை கலாம்போலி, பொய்சார் ரெயில் நிலையங்களில் இருந்து காலி டேங்கர் ரெயில்கள், ஆக்சிஜனை ஏற்றி வருவதற்காக விசாகப்பட்டணம், ஜாம்ஷெட்பூர், ரூர்கேலா, பொகாரோ போன்ற இடங்களுக்கு விரைகின்றன.

ஆக்சிஜன் ஏற்றுவதற்காக முதல் காலி ரெயில் இன்று புறப்பட்டாலும், ஆக்சிஜன் வினியோக நடவடிக்கைகள் தொடங்குவதற்கு அடுத்த சில நாட்கள் ஆகும் என ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் மூலம் நாட்டின் எந்த பகுதியில் ஆக்சிஜன் தேவைப்பட்டாலும் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியும் என நம்பிக்கை தெரிவித்த அவர், இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரசின் விரைவான போக்குவரத்துக்காக பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இதன் மூலம் நோயாளிகளின் தேவை பூர்த்தியாகும் எனவும் தெரிவித்தார்.

முன்னதாக இந்த ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் இயக்கத்துக்காக ரெயில்வே துறை அதிகாரிகள் மற்றும் மாநில போக்குவரத்து கமிஷனர்கள் மற்றும் பிரதிநிதிகள் இணைந்த கூட்டம் ஒன்று கடந்த 17-ந் தேதி நடத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News