வழிபாடு
உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா

Published On 2022-04-07 07:39 GMT   |   Update On 2022-04-07 07:39 GMT
உறையூர் வெக்காளியம்மன் கோவில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ந்தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள சிறந்த சக்தி ஸ்தலங்களில் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலும் ஒன்றாகும். மண்மாரியில் இருந்து உறையூரையும், மக்களையும் காப்பாற்றிய அன்னை வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை 9 மணிக்கு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வெக்காளியம்மனுக்கு விரதம் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தும் ஆண், பெண் பக்தர்கள் திரளாக வந்து கோவிலில் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு கேடயத்தில் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து 13-ந் தேதி வரை தினமும் பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.  பூதவாகனம், கயிலாய வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா காட்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 14-ந் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது. முன்னதாக காலை 9 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10-ம் திருவிழாவான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது. 16-ந் தேதி மதியம் 12 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு கேடயத்தில் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு காப்பு கலைத்தல் மற்றும் விடையாற்றியுடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
Tags:    

Similar News