செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா

மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம்: ஹர்திக் பாண்ட்யா

Published On 2020-11-27 15:16 GMT   |   Update On 2020-11-27 15:16 GMT
சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன், அதேவேளையில் மற்ற ஆல்-ரவுண்டர்களையும் வளர்ப்பது அவசியம் என ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. கடந்த ஆண்டு முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதன்பின் ஐபிஎல் தொடரில்தான் போட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். ஆனால் பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டுமே செய்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார். இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். பந்து வீசவில்லை. பேட்டிங் மட்டும் செய்தார். சிறப்பாக பேட்டிங் செய்து 90 ரன்கள் அடித்தார். இருந்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

போட்டி முடிந்த பின்னர் பேட்டி அளித்தார். அப்போது ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:-

நான் எனது பந்து வீச்சில் கவனம் செலுத்தி வருகிறேன். சரியான நேரம் வரும்போது பந்து வீசுவேன். எனது பந்து வீச்சில் 100 சதவீத திறனை கொண்டு வர விரும்புகிறேன். சர்வதேச அளவிற்கு தேவையான வேகத்தில் பந்து வீச விரும்புகிறேன்.

நாம் நீண்ட கால திட்டத்தை யோசித்து கொண்டிருக்கிறோம். டி20 உலககோப்பை, மற்ற முக்கியமான தொடர்களை பற்றி யோசிக்கும்போது, என்னுடைய பந்து வீச்சு கூட முக்கியத்துவம் பெறுவதாக இருக்கலாம்.

இந்தியாவுக்காக விளையாடும் ஆல்-ரவுண்டர் யாராவது ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும். அவர்களை வளர்த்து விளையாட வைக்க வேண்டிய வழிகளைத் தேட வேண்டும். ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடும்போது கஷ்டமானது. யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், அவரது இடத்தை நிரப்புவதற்கு தயாராக இருக்க வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News