செய்திகள்
கைது

திண்டிவனத்தில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபர் கைது

Published On 2021-07-18 10:21 GMT   |   Update On 2021-07-18 10:21 GMT
திண்டிவனத்தில் வீடு புகுந்து செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

நள்ளிரவில் மர்ம மனிதர் ஒருவர் ஆறுமுகத்தின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் வீட்டின் பின்பக்க கதவை நைசாக திறந்து வீட்டுக்குள் புகுந்தார். ஆறுமுகத்தின் வீட்டில் இருந்த செல்போனை மர்ம மனிதர் திருடினார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம் திடீரென கண் விழித்து பார்த்தார்.

அப்போது வீட்டிற்குள் மர்ம மனிதர் ஒருவர் நிற்பதை கண்டு ஆறுமுகம் அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் திருடன்... திருடன்... என அலறினார். இதைத்தொடர்ந்து அந்த மர்ம மனிதர் திருடிய செல்போனுடன் அங்கு இருந்து தப்பி ஓடினார். ஆறுமுகம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மர்ம மனிதரை பிடிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

இதுகுறித்து திண்டிவனம் போலீசில் ஆறுமுகம் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்த அஜய் ராஜ் (19). என்பவர் ஆறுமுகத்தின் வீட்டிற்குள் புகுந்து செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அஜய் ராஜை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் பல்வேறு பகுதிகளில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 6 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட அஜய் ராஜை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News