இடைத்தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றிபெறும்- நாராயணசாமி பேட்டி
திருச்செந்தூர்:
புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று இரவு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வு எடுத்துவிட்டு இன்று காலையில் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சென்று விஸ்வருப தரிசனம் செய்தார். பின்னர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தில் இருந்து 5சதவீதமாக குறைந்துவிட்டது. மோட்டார் வாகன விற்பனையும் சரிந்து விட்டது. இதனால் சுமார் 30ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். அதற்கு மோடியின் பணமதிப்பிழப்பு கொள்கை தான் காரணம்.
பூரணமதுவிலக்கு என்பது பொருளாதாரம் சார்ந்தது. புதுச்சேரியை பொருத்தவரை அது கலாச்சாரம் சார்ந்தது. பொருளாதாரத்திற்கு மாற்றுவழி கண்டபிறகு தான் பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும்.
புதுச்சேரியில் காமராஜ் நகர் தொகுதி, தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி எளிதில் வெற்றிபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.