உள்ளூர் செய்திகள்
கோவை புறநகர் அம்மன் கோவில்களில் சித்திரை கனி சிறப்பு வழிபாடு
திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
பேரூர்:
பேரூர் செட்டிபாளை யத்தில் மாசாணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரைக் கனி வழிபாடு சிறப்பாக நடப்பது வழக்கம்.
நேற்று காலை 6 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு, மாசாணி அம்மனுக்கு அனைத்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியன வைத்து சிறப்பு அலங்கார பூஜை மற்றும் மகா தீபாராதனை வழிபாடுகள் நடந்தது.
இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமங்கலிப் பெண்கள் ஏராளமானோர் வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசித்துச் சென்றனர்.
பேரூர் கோவில் உதவி ஆணையர் விமலா உத்தரவுப்படி, அலங்கார பூஜைகளை, பூசாரிகள் கனகராஜ், சச்சிதானந்தம் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல், பேரூரிலுள்ள அதிமூர்க்கம்மன், அங்காளம்மன், பச்சாபாளையம் ஸ்ரீ வீரமாஸ்தி அம்மன், மாரியம்மன், மாகாளியம்மன், மகாலட்சுமி அம்மன், காளம்பாளையம் காளகண்ட மாரியம்மன், செல்லப்பகவுண்டன்புதூர் செல்லாண்டி அம்மன், தொண்டாமுத்தூரில் பெரியமாரியம்மன், ஆலாந்துறையில் நாகசக்தி அம்மன் உள்ளிட்ட முக்கிய அம்மன் கோவில்களில் சித்திரைக்கனி வழிபாடு நேற்று சிறப்பாக நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.