செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவு உள்ளது - மத்திய அரசு தகவல்

Published On 2020-10-20 22:52 GMT   |   Update On 2020-10-20 22:52 GMT
கொரோனா சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு போதிய அளவு இருக்கிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை எதுவும் இல்லை. முதல்கட்டமாக 18 மாநிலங்களில் 246 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவும் பணியை மத்திய அரசு தொடங்கி இருக்கிறது. அதில், 67 ஆலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

2-வது கட்டமாக, 30 மாநிலங்களில் மேலும் 150 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும். எனவே, ஆக்சிஜன் கையிருப்பில் திருப்திகரமான நிலைமை காணப்படுகிறது.

கடந்த 10 மாதங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை. இப்போதும் ஏற்படவில்லை. நாம் வசதியான நிலையில்தான் இருக்கிறோம்.

கடந்த ஏப்ரல் மாதத்தில், நாள் ஒன்றுக்கான ஆக்சிஜன் உற்பத்தி திறன் 5 ஆயிரத்து 913 டன்னாக இருந்தது. செப்டம்பர் மாதம் 6 ஆயிரத்து 862 டன்னாக உயர்ந்தது. இம்மாத இறுதிக்குள், 7 ஆயிரத்து 191 டன்னாக அதிகரிக்கும்.

கடந்த வாரம், அன்றாட ஆக்சிஜன் பயன்பாடு, 2 ஆயிரத்து 503 டன்னாக குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில், 17 ஆயிரத்து 103 டன் ஆக்சிஜன் கையிருப்பில் இருந்தது.

தற்போது, 57 ஆயிரம் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நமது ஆக்சிஜன் உற்பத்தி திறன் அதிகமாக இருப்பதால், கவலைப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News