உள்ளூர் செய்திகள்
போத்தனூர் அருகேஆலய உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஆலய முன்புற கேட்டின் அருகே சுவரில் உண்டியல் பொருத்தப்பட்டு உள்ளது. மேலும் கண்காணிப்பு காமிராவும் பொருத்தப்பட்டு உள்ளது.
சம்பவத்தன்று அங்கு வந்த மர்மநபர்கள் ஆலயம் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவை உடைத்தனர். பின்னர் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். மறுநாள் ஆலயத்துக்கு வந்த பாதிரியார் ரோஜோ கண்காணிப்பு காமிரா செயல்படாதது கண்டார்.
இதனையடுத்து அவர் ஆலயம் முன்பு சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து பாதிரியார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.