உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நகை பறிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் நகையை பறித்து சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. ஆடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்.
இவருடைய மகன் சுதர்சன் நேற்று அய்யப்பன் கோவிலுக்கு செல்வதற்காக மடவார்வளாகம் அய்யப்பன் கோவிலில் இருமுடி கட்டி புறப்பட்டார்.
சுதர்சனை வழியனுப்பு வதற்காக அவருடைய தாய் சுமதி மற்றும் அவரது சகோதரி சாந்தி ஆகியோர் கோவிலுக்கு சென்றனர். இருவரும் சுதர்சனை வழியனுப்பி வைத்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக கோலப்பொடி தயாரிக்கும் மண்டபம் அருகே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் சுமதி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினர். இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்கள் ஹெல் மெட் மற்றும் முககவசம் அணிந்திருந்ததால் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராக்களில் அவர்களது முக அடையாளம் சரிவர தெரிய வில்லை.
நகையை பறிகொடுத்த சுமதி கொடுத்த புகாரின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நகை பறித்துச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்.