செய்திகள்
கைது

கல்லூரி பேராசிரியையிடம் ‘சில்மி‌ஷம்’ செய்த விமானப்படை அதிகாரி கைது

Published On 2021-10-15 11:17 GMT   |   Update On 2021-10-15 11:17 GMT
கோவை ரெயிலில் கல்லூரி பேராசிரியையிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட விமானப்படை அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு:

பெங்களூரைச் சேர்ந்த 29 வயது கல்லூரி பேராசிரியை ஒருவர் தசரா விடுமுறைக்காக பெங்களூரில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு கோவை வழியாக செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார். முன்பதிவு பெட்டியில் அவர் பயணம் செய்தார்.

அதே ரெயிலில் பேராசிரியைக்கு எதிரே இந்திய விமானப்படையில் அவில்தாராக பணிபுரியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரை சேர்ந்த பிரப்ஜோட் சிங் (வயது 28) என்பவரும் பயணம் செய்தார்.

அப்போது தனியாக பயணம் செய்த பேராசிரியையிடம் பிரப்ஜோட் சிங் சில்மி‌ஷத்தில் ஈடுபட தொடங்கினார். நள்ளிரவு நேரம் என்பதால் ரெயிலில் மற்ற அனைத்து பயணிகளும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் பிரப்ஜோட் சிங் மட்டும் கல்லூரி பேராசிரியையிடம் தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு வந்தார்.

இதையடுத்து கல்லூரி பேராசிரியை விமானப்படை அதிகாரியை பலமுறை எச்சரித்தார். இருந்தாலும் அவர் காதில் வாங்கிக் கொள்ளாமல் தொடர்ந்து சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார்.

ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு நள்ளிரவு வந்து சேர்ந்தது.

இதையடுத்து கல்லூரி பேராசிரியை ஈரோடு ரெயில்வே பொலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்தவற்றைக் கூறி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.

இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்று விமானப்படை அதிகாரி பிரப்ஜோட்சிங்கை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் அவர் கல்லூரி பேராசிரியையிடம் ஓடும் ரெயிலில் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விமானப்படை அதிகாரி பிரட்ஜோட்சிங்கை கைது செய்தனர்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News