உள்ளூர் செய்திகள்
தமிழ் வாசகம் எழுதிய அட்டைகளை சைக்கிளில் மாட்டி வைத்துள்ள ராஜேந்தர்.

கொரோனா விழிப்புணர்வு, தடுப்பு பணியில் ஈடுபடும் வடமாநில வாலிபர்- ஊராட்சி தலைவர்

Published On 2022-01-23 05:42 GMT   |   Update On 2022-01-23 05:42 GMT
அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவலூர் ஊராட்சி தலைவராக உள்ளவர் முருகன்.
திருப்பூர்:

பீகாரை சேர்ந்தவர் ராஜேந்தர் (வயது 24). திருப்பூர் பாளையக்காட்டில் வாடகை அறையில் தங்கி  தாராபுரம் ரோட்டில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தனது அறையிலிருந்து தினமும் சைக்கிளில் வேலைக்கு  சென்று வரும் ராஜேந்தர்  தன் சைக்கிளில் இரு பகுதியிலும் தமிழ் வாசகம் எழுதிய அட்டைகளை மாட்டி வைத்துள்ளார். மீண்டும் கொரோனா பரவல். மக்கள் சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் என அதில் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராஜேந்தர் கூறுகையில், 

கடந்தாண்டு கொரோனா பரவி பலரும் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தொற்று பரவுகிறது. மக்கள் விழிப்புடன் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் எனக்கு தெரிந்த வாசகத்தை எழுதி வைத்துள்ளேன் என்றார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கருவலூர் ஊராட்சி தலைவராக உள்ளவர் முருகன். கடந்தாண்டு நடந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஏற்கனவே அந்த ஊராட்சியில் 10 ஆண்டுகளாக குடிநீர் திறந்து விடும் 'பிளம்பர்' பணியில் ஈடுபட்டு வந்தார். 

ஊராட்சி தலைவரான போதும் அவரே குடிநீர் குழாய் பராமரிப்பு பணியை செய்து வருகிறார். 

தற்போது தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிளீச்சிங் பவுடர் போடுவது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து முருகன் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சியில் குடிநீர் வினியோக பணியை கவனித்து வந்ததால் எங்கெங்கு, என்ன பிரச்சினை, என்ன தேவையுள்ளது என்பதை அறிவேன். 

ஊராட்சியில் 2 தூய்மை பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். கால்வாய் அடைப்பு, குப்பை அள்ளுவது  உள்ளிட்ட பணிகளை செய்யவே அவர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. எனவே பணியில் தாமதம் ஏற்படக்கூடாது என்பதற்காக பிளீச்சிங் பவுடர் தெளிப்பது, குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை நானே செய்து வருகிறேன். இது எனக்கு திருப்தியளிக்கிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News