வெளிநாட்டினரை அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவிய இந்தியருக்கு 5 ஆண்டு ஜெயில்
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்தவர் யத்விந்தர்சிங் சாந்து. இவர் 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை வெளிநாட்டை சேர்ந்த 400 பேரை அமெரிக்காவுக்குள் வர கடத்தி வந்து ஊடுருவ உதவியதாக குற்றம் சாட்டப்பட்டது.
டொமினிகன் குடியரசு, ஹைதி பியர்டோ நிசோ, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்களை கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ உதவினார். இவரும், இவரது நண்பர்கள் பாம்பா, பூபிந்தர் குமார், ரஜிந்தர்சிங் ராபர்ட் ஹோவர்ட் ஸ்காட் மற்றும் அட்கின்ஸ் லாசன் ஹோவர்ட் ஆகியோர் இந்த செயல்களில் ஈடுபட்டனர்.
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அழைத்து வரப்படுவார்கள். முதலில் இந்தியாவில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், அர்ஜென்டினா, ஈரான், பனாமா, வெனிசுலா, பெலிஷ் மற்றும் ஹைதி வழியாக டொனிகன் குடியரசு நாட்டுக்கு அழைத்து வந்தனர்.
அங்கிருந்து படகுகள் மூலம் பியர்டோரிகா அல்லது புளோரிடாவுக்கு அழைத்து வரப்பட்டு விமானம் மூலம் கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட பல நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். டொமினிக் குடியரசு நாட்டில் இருக்கும்போது அமெரிக்காவுக்குள் நுழைய போலி விசா தயாரித்து வழங்கினர்.
அதுபோன்று கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ செய்ய தலா 30 ஆயிரம் டாலர் முதல் 85 ஆயிரம் டாலர் வரை பணம் பெற்றுள்ளனர்.
இதுசம்பந்தமாக கைது செய்யப்பட்ட யத்விந்தர்சிங் சாந்து மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளி யத்விந்தர்சிங் சாந்துவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
இவர் 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை 400-க்கும் மேற்பட்டோரை கடத்தி வந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ செய்துள்ளார். பயணத்தின்போது ஒருவர் மட்டும் உயிரிழந்தார். #Americancourt